(Santhara என்று ராஜஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னர் பிரபலமாகப் பேசப்பட்ட, ஆங்கில Euthanasia வை இதுவரை நெதர்லாந்தைத் தவிர வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. தமிழில் கருணைக்கொலை என்ற இச்சித்தாந்தத்தை அஹிம்சைக்காரர் மோகன்தாஸ் காந்தி அவர்களே அங்கீகரித்திருக்கிறார்! "இனிமேல் இவன் தேறமாட்டான்" என்ற அவநம்பிக்கையில் தூக்குத்தண்டனைகளை ஆதரிக்கும் நாடுகள்கூட, "இனிமேல் இவன் தேறமாட்டான்" என்ற நம்பிக்கை வார்த்தைகளைக் கருணைக்கொலை யாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. நாகரீகத் தொட்டிலில் இப்போது ஆடிக்கொண்டிருக்கும் இச்சிறுபிரச்சனைப் பற்றி நான் கருத்துகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால்,,,)
தன்மை:
-------
சங்கூதி நீர்வெழாவி
சாஞ்சாராம் பண்டாரம்
வெடி விடி
போட்ட காலங்க
கண்ணோட சேந்து
பாழாப் போச்சு
நுனியில நூலுகட்டி
பொடனியில முட்டுகுடுத்து
காதுல சொருகின
கண்ணாடியுங் கூட
ஆடுற உசிருபோல
நெலச்ச பாடில்ல
உள்ளங்கை எடுத்து
கமுக்கட்டி சொருகி
யாருக்குந் தெரியாம
நான் எழுப்பும் சத்தங்க
காதோட விழாம
கேக்காம போச்சு
ஒண்ணுக்குப் போகவே
தொணையாளு கேட்டுப்பாத்தேன்
வெரல்தண்டி மொளக்குச்சி
யாருக்கிட்ட கேப்பேன்?
கண்ணில்லா சென்மம்
கர்த்தரே ஏனய்யா?
அடங்கி இருந்தா
ஆயிரங்காலமுன்னு
நல்லதக் கேட்டு
வாழ்ந்த நாராயஞ்சாதி
நாஞ் சொன்னாப்புல
அருந்த நோனி நானு.
முன்னிலை:
----------
ஒருமுறை ஜென்மப்பாவங்கள் கழுவப்பட்டு
எழுமுறை நோயில் பூசிய
இவரின் பிணிகள் எல்லாம்
லாசரைப் போல
பூரண குணமடைந்து
பரலோகப் பிதாவில்
நித்திய ஜீவனை அடையும்படிக்குப்
பரிசுத்த ஆவியின் துணையோடு
எல்லாம்வல்ல பரமபிதாவிடம்
பிரார்த்திப்போம். ஆமென்.
படர்கை:
-------
வேதனை கரைக்கும்
நெற்றியில் கிறிஸ்துமா தைலம்
வயிற்றில் தீர்த்தம்
இது ஆன்மீகம்.
கல்லையும் கரைக்கும்
வயிற்றில் HCl
இது அறிவியல்.
இருக்கப்போற காலம்
இல்லாமலே இருக்கலாம்
இப்படி இக்காலம் ஆனபின்பு
அடங்கி இருக்கவும் வேணாம்
ஆயிரங்காலமும் வேணாம்.
அறிவியல் ஆன்மீகம்
யாருக்கும் தெரியாம சேத்தாச்சு
இது ரகசியம்.
சாஞ்சாரு பண்டாரம்.
நீர் வெழாவினாங்க.
சங்கூதுனாங்க.
ஊரே சொன்னது
"மண்ணுக்குப் போகையிலையும்
மண்ணாச விடல".
நோர மூடிக்கிட்டு
அமைதியா யோசிச்சேன்
"என் மண்ணாச தீத்துவெக்க
எனக்காக ஒரு உசுரு வேணும்",,,
-ஞானசேகர்
(என்றுமே முன்னிலைக்கு வராமல், என்றோ ஒருநாள் தன்மையாகப் போகும், இன்றைய படர்கை)