புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, June 10, 2009

துருத்தி

வாசலில் போடப்பட்டிருக்கும் பால்பையை எடுத்துப்போய் அம்மாவிடமும், செய்தித்தாளை அப்பாவிடமும் கொடுக்க குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.
- வெண்ணிலா (நெருப்பு மலர்கள், ஞாநி)

இங்குதான் இவள்
தனியாக
உறங்குகிறாள்.
- யாரோ சொன்னதாக, பால்வினை தொழிலாளி பற்றி, வைரமுத்து சொன்னது


அது நடப்பதுமில்லை
அது விழிப்பதுமில்லை
அது புசிப்பதுமில்லை
அது பிரசவிப்பதுமில்லை

அது அதுவாகவே இருப்பதுமில்லை
அதாவது
அது 24 * 7 அது இல்லை.

வாரமொருநாள்
நள்ளிரவில் ஒருமணிநேரம்
அது அவளாகும்.

அவள் என்றால்
முழுவதும் அவள் இல்லை
மூச்சு மட்டும் விடுவாள்.

என்றோ ஒருநாள்
இதுபோதும் என
நிறுத்திக்கொண்ட
சராசரி வாழையுயர
ஆலத்தின் அடியில்
ஒரு மண்மேட்டின்
ஆழத்தில் அது இருக்கும்.

உலகம் படைத்த கடவுளின்
ஏழாம் நாள் ஓய்வின்
உதாசீனம் அவள்.

உண்மையிலேயே
அதுவா? இல்லை அவளா?
யாருக்கும் தெளிவில்லை.
தெளியாத பலகதைகள்.

குறுநில மன்னனின்
காமவேட்டைக்குத் தப்புகையில்
யானைவேட்டை குழியில்
விழுந்து இருக்கலாம்.

ஆஸ்த்மா நோய்கள்
அறியப்படாத காலத்தில்
பெரும்பாடுபட்டு
இறந்து இருக்கலாம்.

எது என்னவாக
இருந்ததால் என்ன?
அது அவள்தான் என
நள்ளிரவு பெண்கள் கூட்டம்
அந்த மூச்சுவிடும்
கல்லறை சுற்றி.

அதோ
அது அவளாகிறாள்.
அவள் அதுவாவதற்குள்
வேண்டுதல்கள் கூறியபடி
ஆங்காங்கே சிலர்.

ஒருமணி நேரத்தில்
அவளும் அதுவானது.

சிவந்த கண்களின் கறைகளை
முந்தானையின் கரைகள் துடைக்கின்றன.

குத்துப்பட்ட மார்புகள்
சரியாக மூடப்படுகின்றன.

கடைபோன சிறார்கள்
தேடப்படுகிறார்கள்.

நனைந்த ஆணுறைகள்
கருவேலமரத்தில் பூக்கின்றன.

பெருமூச்சு விட்டபடி
அவர்கள் புறப்படுகிறார்கள்.
அவர்களின் அடுத்த
இரவு எப்படியோ?

பீடியில் இருந்து
சிகரெட் மாறிய ஒருவன்
ஒருத்தியின் மர்ம உறுப்பில்
தூபம் செய்யலாம்.

சாமிக்கு மாலைபோட்ட
ஆசாமி ஒருவன்
நிர்வாணமாய் நிற்கச்செய்து
பார்வையால் குத்தலாம்.

மனைவி ஒருத்தியின் கள்ளக்காதலால்
வரதட்சணை வழக்கில்
பத்தாவது முறை ஒருவன்
தலைநகரம் செல்லலாம்.

கேஸ் அடுப்பு திறந்து வைத்து
மருமகளைப் பூட்டிவைது
திருப்தியாக மாமியார் ஒருத்தி
திருப்பதி போகலாம்.

இதே நேரத்தில்
வீட்டில் தனியே இருக்கும் மகள்
பூப்பெய்தி இருக்கலாம்.
போனவாரம்வரை
மொட்டைக் கிள்ளிய
பக்கத்துவீட்டு அண்ணா
அந்தப் பூவையும் பறித்திருக்கலாம்.

ஏதோ ஒரு திருப்தியில்
அவர்கள் போகிறார்கள்.
ஏதோ ஒரு நம்பிக்கையில்
மீண்டும் வருவார்கள்.

அதுவாகவோ இதுவாகவோ
உயிர் மதிக்கப்படாமல்
வாழ்ந்துவிட்டு
அவளாகவோ இவளாகவோ
திரும்பி வந்து
அவள் மூச்சு கேட்கும்வரை
அவளும் அதுவாகவே இருக்கும்.

மீண்டும்
அடுத்த வாரம்
சந்திக்கும்!

- ஞானசேகர்

1 comment:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

என்ன சொல்ல?

ஏதாவது சொல்ல வேண்டுமா?