புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, August 23, 2009

மதுரை காந்தி மியூஸியம்

Generations to come will scarce believe that such a one as this walked the earth in flesh and blood.
- Albert Einstein

ஆகஸ்ட் 14, 2009. பாகிஸ்தான் சுதந்திர தினம். இரண்டு கிராமங்களை இலக்காக வைத்து, அதிகாலை 5 மணிக்குத் திருச்சியில் இருந்து பயணத்தை ஆரம்பித்தேன். ஒன்று மதுரையின் தெற்கே உள்ளது; இன்னொன்று வடக்கே. திண்டுக்கலில் இருந்து மதுரை செல்லும் வழியில் பாதியிலேயே இறங்கி, அந்த மலையடிவாரக் கிராமத்தைப் பார்த்துவிட்டு, ஆரப்பாளையம், ஆயிரம் கால் மண்டபம், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், இன்னொரு கிராமத்தையும் பார்த்துவிட்டு பெரியார் பேருந்து நிலையம். தந்தி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, மாநகராட்சி பெயர்பலகை சொன்ன திசையில் நடந்து அந்த வெள்ளை மாளிகையை அடைந்தேன். காந்தி மியூஸியம்.

விவேக்கும், சுந்தர் சியும் சிறைக்கைதிகளாக வந்து காமெடி செய்வதாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் அதே இடம்தான். ஆனால் எனக்கு அறிமுகம் செய்தது மணா அவர்களின் தமிழகத் தடங்கள் (உயிர்மை பதிப்பகம்) புத்தகம். சுதந்திர இந்தியாவில் காந்தியின் மறைவுக்குப்பின் உருவான முதல் மியூஸியம்.

காந்தியின் தோற்றத்தையே மாற்றிய மதுரை; பாரிஸ்டரை அரைநிர்வாணப் பக்கிரியாக மாற்றிய மதுரை; தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படாத மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழையாமல் காந்தி திரும்பிப்போன அதே மதுரை; அரிஜன ஆலயப் பிரவேசம் நடந்தபோது அதே கோவிலுக்குள் காந்தியையும் நுழையவைத்த மாமதுரை. இப்படி காந்தியின் வாழ்வில் முக்கியபங்கு வகித்த மதுரைநகரில், பரிசீலிக்கப்பட்ட ஏழு இடங்களில் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு காந்திக்கான முதல் மியூஸியம் அமைக்கப்பட்டது. இதன்பிறகே போர்பந்தர், ராஜ்கோட், சபர்மதி, தண்டி, வார்தா, நவகாளி போன்ற இடங்களிலும் மியூஸியங்கள் அமைக்கப்பட்டன.

1. மியூஸியம் அமைந்துள்ள தமுக்கம் அரண்மனை பற்றி,

2. கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த வேட்டி இரத்தக்கறையுடன்,

3. மூன்று காந்தியக் குரங்குகள். மிசாரு மசாரு மிகசாரு. மஹாராஸ்ட்ராவின் மேற்குத் தொடச்சி மலையில் உயரமான இடமான மஹாபலேஸ்வரில், இயற்கையிலேயே இக்குரங்குகளின் தோற்றத்தில் அமைந்த மூன்று பாறைகள் ஒரு பள்ளத்தாக்கில் உள்ளன.

4. பிப்ரவரி 23, 1946 அன்று தாழ்த்தப்பட்டவர்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டபோது, முதல்முறையாக காந்தி அக்கோவிலுக்குள் செல்லும்காட்சி. இப்புகைப்படம் ஆயிரம்கால் மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஹிட்லருக்குக் காந்தி எழுதிய கடிதத்தின் நகல், வட்டமேசை மாநாட்டில் காந்தி உடுத்தியிருந்த சால்வை, காந்தியின் அஸ்தி, அவர் படித்த புத்தகங்கள் போன்ற காந்திய அம்சங்கள் ஏராளம். இவற்றைத்தவிர இன்றைய இந்திய தேசியகொடி தோன்றிய வரலாறு, தொற்றுநோய் காலத்திலும் மக்களைத் தொட்டுப்பார்த்த ஒரு மனிதன், பூகம்பப் பூமியின் இடுக்குகளில் பிரயாணித்த ஒரு தலைவன், தலைமையையும் காலணியையும் தூக்கியெறிந்துவிட்டு நாடுமுழுவதும் நடந்துதிரிந்த ஒரு சாமானியன். இந்தியாவில்தான், தமிழ்நாட்டில் காண ஓர் இடம்.

காந்தியின் ரத்தக்கறைபடிந்த கடைசி ஆடை வைக்கப்பட்டிருக்கும், உட்புறம் கருப்பு வர்ணம் பூசப்பட்ட அந்த தனியறையில் வாலிபக் கூட்டமொன்று அடித்த கிண்டல்; நேதாஜியின் புகைப்படத்தைக் கிழித்து கிறுக்கித் திட்டவும் பாராட்டவும் உபயோகப்படுத்தப்பட்ட தமிழ்மொழி. இப்படி சில கெட்ட அனுபவங்கள் கிடைத்தாலும், பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளைப் பார்த்து வருத்தப்பட்ட ஓர் ஆங்கிலேயக் குடும்பத்தைப் பார்த்த திருப்தியும் கிடைத்தது.

எனக்கு மணா; யாருக்கோ நான் என்ற நம்பிக்கையில்....

- ஞானசேகர்
(சத்திய சோதனையால் மகாத்மா, உங்களில் பலரைப் போலவே)

Thursday, August 20, 2009

தாய்மாமன் கதை

ஆடு கனவுகண்டா
அருவா அறியாது

புழுவெல்லாம் கனவுகண்டா
கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம்

- வைரமுத்து (தோழிமார் கதை - பெய்யெனப் பெய்யும் மழை)


(தனது சகோதரியின் தாயிழந்த பிள்ளைகளுக்காகக் கல்யாணம் தவிர்த்து வாழும் மகாத்மாக்களுக்காக - அங்கிள் மாம்ஸ் காலத்தில்கூட மாமன் சித்தப்பன் வித்தியாசப்படுத்தும் உண்மைத் தமிழர்களுக்காக - பருத்திவீரனின் முடிவுக்குப் பின் சித்தப்புவின் எதிர்காலம் சிந்தித்தவர்களுக்காக,)

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழும் மலை
இடுக்கெல்லாம் அடைகட்டி
தேனடையும் குன்னமலை.

குன்னமலை முகத்தில்
வெயில் பொசுக்கும் ஒரு முகட்டில்
ரயில் பாத்த சிறுவயசு
மகனே நெனவிருக்கா?

ஒருகை முட்டுதந்து
அக்காவ நான் நிறுத்த

அஞ்சு வெரலும்
அடுத்தடுத்து கொடுத்துனக்குப்
பால் அழுக நான் நிறுத்த

போலீசுக்குப் பயந்துபோய்
என் அழுக நான் நிறுத்த

எறப்பும் பொறப்பும்
எங் கூடவந்த
சாமத்துக் கார்சவாரி
மருமகனே நெனவிருக்கா?

அம்மா போத்து
நான் படுக்க
பாழாப் போன
கொப்பளமும் தான்வலிக்க
அம்மாவப் போலநீயி
அங்கமெல்லாம் கழுவுனியே
அய்யா நெனவிருக்கா?

காலைக்கடன் தொடச்ச கல்லப்
பொதருக்குள்ள நாமெறிய
கலவிய ரெண்டு பாம்பு
சர்ர்ர்ருன்னு சீறிவர

டவுசர விட்டுப்புட்டு
தல தெறிக்க நீயோட
கைலிய கழட்டிப்புட்டு
காலால நான் பறக்க

செத்தபாம்பு சட்டைதுக்கி
வீராப்பா வீதியில
உலா போனோம் நெனவிருக்கா?

ஒண்ணா திரிஞ்சோம்
ஒரே துண்டில் துயில் கண்டோம்
ஒண்ணாவே இருக்க
ரெண்டுபேரும் யோசிச்சோம்

மகளப் பெத்த
வாழாவெட்டி நாங்கட்டி
மகள நீ கட்டி
மாமன் மருமகனா
ஒரேவீட்டில் வாழச்
சம்மதிச்சோம் நெனவிருக்கா?

பத்தாவது பீசாகி
கல்லொடைக்க நான்போக
வாத்தியார அடிச்சிப்புட்டு
வீட்டவிட்டு நீ ஓட

சோசியஞ் சொன்ன
சாமியெல்லாம் தேடிப்போனேன்
ஏஞ் சாமி நெனவிருக்கா?

தாராபுரம் தாண்டிப்போயி
தாரங்கட்டி நீதிரும்ப
ஆசிர்வாதம் கேக்கயில
ஆயுசுக்கும் மொததடவ
மாமானியே நெனவிருக்கா?

திருமதியக் கூட்டிக்கிட்டு
திருப்பூரு நீபோக
வான்மதியும் புடிக்காம
மதியிழந்து நான்போக

ஓங்குடும்பம் ஓம்புள்ள
ஓம்பொழப்பு ஒன்னோட
எங்கக்கா அவபுள்ள
பழந்நெனப்பு என்னோட.

நாளும் நழுவிடுச்சு
நரம்பெல்லாம் சுண்டிருச்சு
உன் தோளேறி தேர்பாக்க
மகன்கூட வளந்திருச்சு

வயலோரம் வளந்த மலை
வானரமும் வாழ்ந்த மலை
டவுன்காரன் வீடுகட்ட
லாரியேறிப் போயிருச்சு!

- ஞானசேகர்
(அம்மா என்று இருமுறை சொல்லி மாமா என்ற வார்த்தையைப் பழகியவன், உங்களில் பலரைப் போல)

Thursday, August 06, 2009

உறுபசி

இதே இடத்தில்
மகனை இழந்தவள்
தூக்கியெறிந்த தேங்காய்ப்பழம்
திரும்பி வந்தது
அடுத்த அலையில்.

- ஞானசேகர்

Monday, August 03, 2009

பெய்யெனப் பெய்யாத மழை

கடிதம் போட்டு
திருடன் வந்தான்
அனுப்புநர்: மாப்பிள்ளை.
- யாரோ

கோட்டு போட்ட மாப்பிள்ளைக்கு
ரேட்டு கொஞ்சம் சாஸ்தியின்னா
இதுக்குப் பேரு என்ன?
ஆண் விபச்சாரம்.
- ABCD திரைப்படத்தில் பாரதியின் அறிமுகப் பாடல்


சொர்க்கத்தின் மனுமகன்
தொழுகிறாள்
ரொக்கத்தின் மணமகன்
தழுவாதவள்.

- ஞானசேகர்