புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, February 10, 2012

இரகசிய உருவகம்

ஒரு முறை
நான் ஓடையிடம்
கடலைப் பற்றிச் சொன்னேன்.
அது என்னை
ஒரு கற்பனாவாதியாக
நினைத்துக் கொண்டது.
ஒருமுறை
நான் கடலிடம்
ஓடையைப் பற்றிச் சொன்னேன்
அது என்னை
ஒரு குறுகிய புத்திக்காரனாக
நினைத்துக் கொண்டது.
- கலீல் கிப்ரான்

இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்

சில சமயங்களில்
உள்ளது உள்ளபடியே சொல்லப் போய்
ஓர் இரகசியத்திற்கான மரியாதை
சிறிதும் இன்றி
எளிதாக மறுக்கப்பட்டு விடுகின்றன‌

சில சமயங்களில்
இதெல்லாம் இரகசியமே இல்லை என்று
இரகசியங்களுக்கான எனது எல்லைக் கோடுகள்
மறு பரிசீலனை செய்யப்படுகின்றன‌

சில சமயங்களில்
தக்க காலத்தில் சொல்லப் படவில்லை என‌
மன்ற நடுவில் என்னைக் கூண்டில் ஏற்றி
விவாதிக்கப் படுகின்றன‌

சில சமயங்களில்
இரகசியங்களுக்கான மரியாதையுடன்
அங்கீகரிக்கப்பட்ட‌ பின்னும்
சாட்சி சொல்ல நான் அழைக்கையில்
மறுதலிக்கப் படுகின்றன‌


உண்மையிலேயே
இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்


அவற்றைப் பத்திரப் படுத்தும்
இன்னோர் இடத்தைத் தேடுவதை விட‌
அவற்றைச் சொல்வதற்கான‌
சொற்களின் தேடுதலில்
அதிக கவனம் செலுத்துகிறேன்
அதிக காலம் செலுத்துகிறேன்

பிரத்யேகச் சொற்களில்
இரகசியங்களை உருவகப் படுத்தும்போது
உவமேயத்தைப் பல உவமானங்களால்
நன்கு சுற்றிப் பத்திரப் படுத்துகிறேன்

எனது உவமேயத்தைப் போலவே
எனது உவமானங்களையும்
இரகசியங்களால் அலங்காரப் படுத்துகிறேன்

அவை ஒவ்வொன்றாய்
அவிழ்க்கப் படும்போது
உவமேயத்தின் மர்மத்தைக் கூட்டுவதில்
மிகுந்த கவனமாய் இருக்கிறேன்

கேட்கும் காதுகளின்
நம்பகத்தன்மைக்கு ஏற்ப‌
எனது உவமானங்களையும்
மாற்றி அமைக்கிறேன்

இரத்தம் சிவப்பானாலும்
மாற்றுகையில் தேவைப்படும்
பிரிவைப் போல்
பிறத்தியாரின் உவமானங்கள் குறித்தான‌
மறைநூல் போதனைகளை
ஆராய்கிறான் ஆத்திகன்

இல்லாத கடவுள் போல்
என் உவமானத்திலும்
உவமேயத்தின் இருப்பைச்
சந்தேகிக்கிறான் நாத்திகன்

பிரம்மச்சாரி அறையின்
விந்துக் கறை போல்
இலைமறை காய்கள் அதிகம்
எதிர்பார்க்கிறான் இல‌க்கிய‌வாதி

விவிலியம் கீதை குரான்
எல்லாமே ஒன்றுதான்
அவை போல் எனது உவமானங்களும்
என்கிறான் படிக்காதவன்

தேர்வுக்கு இல்லாத பகுதிகள் போல்
குறித்துக் கொள்ள மறுக்கிறான் படிப்பாளி

செல்லாக் காசு போல்
விட்டெறிகிறான் காரியவாதி


உண்மையிலேயே
இரகசியங்கள் சொல்கையில்
நான் மிகவும் தடுமாறுகிறேன்


உவமானங்களால்
சுற்றிச் சுற்றியே
பல சமயங்களில்
உவமேயங்களை
மறந்து விடுகிறேன்

ஆடையென உவமான‌ங்களை
அவிழ்த்துக் கொண்டு
என்னுடனேயே புதைக்கிறது
உவமேயங்களை உலகம்

உவமேயங்களைப்
புரிந்து கொள்ளாமல்
உவமானங்களில்
பூரித்துப் போகும் உலகம்
ஆடையற்றுத் தெரிகிறது
சவக்குழியில் இருந்து பார்க்கையில்!

- ஞானசேகர்

No comments: